காவல்துறை வேலை என்பது பலருக்கு கனவு. இதற்காக வருடகணக்கில், தங்களின் உடல்திறனையும் அறிவுத்திறனையும் வளர்த்து வருவோர் அதிகம். இந்தநிலையில், காவல்துறையில் எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதற்கான தகுதிகள், விண்ணப்பம் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது காவலர் தேர்வுக்கான செயல்முறை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: செம்ம வாய்ப்பு… தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டீஸ் வேலைக்கு நீங்க தயாரா?
இந்தநிலையில், விரைவில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. குறிப்பாக கைரேகை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி:
காவல் உதவி ஆய்வாளர் (கைரேகை): இந்தப் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்): இந்தப் பதவிக்கு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36,900 – 1,16,600
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இரண்டாம் பகுதி பொது அறிவு. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொது அறிவுப் பகுதி மதிப்பீடு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil