தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வித்துறையில் 2023-24ஆம் ஆண்டு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூன் 23ம் தேதி நடக்கும்.
காலியிடங்களின் விவரம்
பின்னடைவு இடங்கள்
தமிழ் - 19,
சிறுபான்மை மொழி - 20
புதிய இடங்கள்
தமிழ் – 1388
தெலுங்கு – 75
உருது – 35
கன்னடம் - 2
கள்ளர் நலப் பள்ளிகள் – 18
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் – 139
பழங்குடியினர் நலப் பள்ளிகள் – 22
மாற்றுத்திறனாளிகள் நலப் பள்ளிகள் - 29
சென்னை மாநகராட்சி பள்ளிகள்: தமிழ் - 20, சிறுபான்மை மொழி உருது - 1
கல்வித் தகுதி
போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவினர் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20600 – 75900
தேர்வு முறை
இந்த தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இதில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பெற வேண்டும்.
இரண்டாம் பகுதி முதன்மைத் தேர்வு, இதில் 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்தத் தேர்வில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவினர் குறைந்தபட்சமாக 45 (30 சதவீதம்) மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தேர்வுக்கான கேள்வித்தாளில் மொழிப்பாடத்துக்கான கேள்விகள் அந்த மொழியிலும், ஆங்கில பாடத்துக்கான கேள்விகள் ஆங்கிலத்திலும், இதர பாடங்களுக்கான கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
தேர்வு கட்டணம்: தேர்வுக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வுக் கட்டணத்தை இணைய தளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Apply Online என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
பதிவு செய்த பின்னர் உங்களின் மொபைல் எண்ணுக்கு உள்நுழைவு ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கப்பெறும்.
இந்த உள்நுழைவுச் சான்றுகள் மூலம் உள்நுழைந்து, கல்வித் தகவல்கள், தேர்வு மைய விவரம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து உங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின்னர், விண்ணப்பத்தை சமர்ப்பித்துக் கொள்ள வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தேர்வு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“