தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நேற்று (ஜூலை 11, 2025) வெளியிடப்பட்ட தேர்வு அறிவிக்கையில், இத்தேர்வு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் பாடத்திற்கு 216 பேர், ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை 1-57, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-102 பேர் தேர்வு செய்யப்பட இருந்தனர்.
கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய ஆகஸ்ட் 13 முதல் 16-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்களை tnbgrievancc@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
தேர்வு ஒத்திவைப்பு காரணம்:
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண். 02/2025 (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு, இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அதே நாளில் (செப்டம்பர் 28, 2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Combined Civil Services Examination - II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதால், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.