இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 காலிப்பணியிடங்கள் அடங்கிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை 09.02.2024 அன்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 15.03.2024 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 26,510 பேர் இந்த இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து 16.07.2024 அன்று இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர் பதவிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து நியமனத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு செயல்முறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இதுவரை விடைக்குறிப்பும் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
இதனையடுத்து தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விடைக்குறிப்புகளையும், தேர்வு முடிவுகளையும் உடனடியாக வெளியிட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16.07.2024 அன்று கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,000 காலிப்பணியிடங்களின் இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அவற்றில் உள் ஒதுக்கீடு மூலம் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. தேர்வர்கள் முழுமையான விவரங்களை https://trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்கள் கடந்தும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இடஒதுக்கீடு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும், விடைக்குறிப்பு மற்றும் முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பல தேர்வுகள் நடத்த திட்டமிட்ட நிலையில், இடைநிலை ஆசிரியர் தேர்வை மட்டுமே டி.ஆர்.பி நடத்தியது. தற்போது 2025 ஆம் ஆண்டு பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையிலே வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் டெட் தேர்வு இடம்பெறாதது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் டி.ஆர்.பி பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறையை அடுத்தடுத்து அறிவித்து வருவதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.