இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தொடக்க கல்வி துறையில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள் ஜூலை 3 ஆம் தேதியும், வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை 4 ஆம் தேதியும் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19, 21 ஆம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23 ஆம் தேதிகளிலும் நடத்தப்படும். மேலும், பட்டதாரி ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதுதவிர, ஆசிரியர் தேர்வு வாரியம் ((டி.ஆர்.பி) மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான நபர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18 ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்துவதற்கான மின் இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.