/indian-express-tamil/media/media_files/HHSJ5D3hAa2kzhZpFy32.jpg)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அட்டவணையை இரண்டு மாதங்கள் முடிவடைந்தும் வெளியிடாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் போராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மேலும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் டி.ஆர்.பி தான் நடத்துகிறது.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முந்தைய வருடத்தின் கடைசி வாரத்தில் அல்லது அந்த வருடத்தின் தொடக்கத்தில், அந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியல் அடங்கிய வருடாந்திர அட்டவணையை வெளியிடும். இது தேர்வர்கள் தாங்கள் தயாராகி வரும் தேர்வுக்கு அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடைபெறும் என்பதைத் தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப தயாராக உதவும்.
இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், வருடாந்திர அட்டவணையை இன்னும் வெளியிடாதது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு (2024) ஆசிரியர் தேர்வு வாரியம் ஜனவரியில் வருடாந்திர அட்டவணையை வெளியிட்டது. ஆனால் தற்போது மார்ச் மாதம் ஆகியும் இன்னும் அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வரும் ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர். இந்தத் தகுதித் தேர்வில் தகுதி பெற்றால் தான் நியமனத் தேர்வு எழுத முடியும். அதில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணி கிடைக்கும். ஆனால் தகுதித் தேர்வே எப்போது நடைபெறும் என்று தெரியததால், அரசு ஆசிரியர் பணியை எதிர்ப்பார்த்து படித்து வரும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்பும் 2.17 லட்சம் ஆசிரியர் ஆர்வலர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். முதுகலை ஆசிரியர் பணிக்கு சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இரண்டிலும் காலியிடங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான தேர்வர்கள் நியமனங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை ஆட்சேர்ப்பில் ஏற்படும் தாமதம் மோசமாக பாதிக்கும். இருப்பினும், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியிடங்களை அடையாளம் காணும் செயல்பாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடையாளம் காணும் செயல்முறை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. டி.ஆர்.பி விரைவில் வருடாந்திர அட்டவணையை வெளியிடும், என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், கடந்த 2024-ம் ஆண்டு டி.ஆர்.பி தேர்வு அட்டவணையில் வெளியிடப்பட்ட டெட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு ஆகிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கூட இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டு தேர்வு முடிந்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு முடிவடைந்த நிலையில், இறுதி வரை விடைக்குறிப்புகள் கூட வெளியிடப்படவில்லை.
எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து வருடாந்திர அட்டவணையை வெளியிடுவதோடு, தேர்வுச் செயல்முறையை துரிதப்படுத்தி, பணி நியமனங்கள் வழங்குவதை விரைவுப்படுத்தவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.