திருச்சி மாநகர காவல் துறையினரின் பணிச்சுமையை குறைப்பதற்கும், வலுவை கூட்டுவதற்கும் ஊர்க்காவல் படையினர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மாநகர காவல் துறையினருடன் இணைந்து ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள், முக்கிய நபர்கள் வருகையின்போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்தின்போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் ஊர்காவல்படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் ஆள்சேர்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 1 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
இதற்காக திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்களுக்கான நேர்முக தேர்வு, கூடுதல் காவல் துணை ஆணையர் விக்னேஸ்வரன் தலைமையில், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநகர ஊர்க்காவல் படையில் 28 காலிப் பணியிடங்களுக்கு 94 ஆண்களும், 19 பெண்கள் என மொத்தம் 113- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு எடை, உயரம், சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும். உயரம் ஆண்-165 செ.மீ, பெண் - 155 செ.மீ இருக்க வேண்டும். திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது. எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று ஏராளமானோர் திருச்சி மாநகர காவல் துறையில் ஊர் காவல்படையின் சார்பில் இணைந்து பணியாற்ற விருப்பத்துடன் திரண்டு இருந்தனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil