/indian-express-tamil/media/media_files/2025/09/16/trichy-welfare-association-of-2013-teachers-eligibility-test-passers-press-meet-tamil-news-2025-09-16-18-03-12.jpg)
"2013 ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை வஞ்சிக்க கூடிய செயலை இந்த அரசு செய்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் அறிவிக்கின்றோம்." என்று 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றோர் நல சங்கத்தினர் தெரிவித்தனர்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நல சங்கம் திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும். தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் தேர்ச்சி வேண்டுமென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாணவர்கள் நலன் மீதும் கற்றல் அடைவுகள் மீதும் நம்பிக்கை கொண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆகச்சிறந்த தீர்ப்பளித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளனர்.
இச்சூழலில் பணியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தனியே சிறப்பு தகுதித்தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலைப்பாட்டை 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60,000 ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எங்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
சிறப்பு தகுதித்தேர்வு என்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இந்த சிறப்பு தகுதித்தேர்வு திறன்மிகு ஆசிரியர்களை அடையாளம் காண ஒருபோதும் உதவாது. இப்படி தனியே நடத்தப்படும் தகுதித்தேர்விற்கு 20 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படுகிறது என செய்திகள் வெளிவந்தது வேதனையின் உச்சம். பள்ளியில் படித்து தேர்ச்சி பெறக்கூடிய கடைநிலை மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 என்று இருக்கையில் அதை கற்பிக்கக் கூடிய ஆசிரியருக்கு 20 மதிப்பெண்கள் என்ற நிலைப்பாடு கேலிக்கூத்தானது.
மேலும், உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பது ஆசிரியர் தகுதித்தேர்வு (TET- Teacher Eligibility Test ). ஆனால் தற்போது அரசு நடத்த முற்பட்டிருப்பது (TET- Teacher Escape Test ) ஆசிரியர் தப்பிப்பதற்கான தேர்வு 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 12 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தின கூலியாக செயல்படும் எங்களுக்கு பணி வழங்காமல் மாணவர் நலன்களை துளியும் கருத்தில் கொள்ளாமல் வாக்கிற்காக அரசு எடுக்கும் இந்த முடிவுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நீர்த்துப்போக செய்து நிர்மூலமாக்கி விடும்.
எங்கள் மீது திணித்துவிட்டு பணியிலுள்ள ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் இன்னொரு நியமனத்தேர்வு எழுத வேண்டும் என்று கூடுதல் தேர்வுகளை இந்த அரசு தகுதிபெறாத ஆசிரியர்களுக்கு, தகுதித்தேர்வில் சமரசம் செய்து கொள்வது என்பது ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் செயலாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013-ம் ஆண்டு ல் தேர்ச்சி பெற்று மேலும் இரவு பகலாக கண்விழித்து படித்து இலட்சியத்தோடும், ஆசிரியர் கனவோடும் காத்திருக்கும் எங்களுக்கு மற்றொரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை (149) ஏற்கனவே சொன்ன வாக்குறுதியின் அடிப்படையில் நீக்கிவிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். தனியே ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது என்பது அப்பாவின் ஆட்சியில் தப்பான முடிவாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்த வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் அதே வேளையில், தமிழக அரசு தனியே ஒரு தகுதி தேர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது வரலாற்றுப் பிழையாகும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தேர்ச்சி பெற்று தகுதியான ஆசிரியர்கள் பணி இன்றியும் தவித்து வரும் இந்த தமிழகத்தில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு வேறு ஒரு கண்ணோட்டத்தில் தகுதித்தேர்வில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது என்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதும் நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் தொடர்ந்து 2013 ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை வஞ்சிக்க கூடிய செயலை இந்த அரசு செய்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் அறிவிக்கின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us