2020-21ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும், அக்டோபர் 30க்குப் பிறகு புதிய சேர்க்கைகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
யு.ஜி.சி முதன்முதலில் 29-4-2020 அன்று உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் ஜூலை 1-15 தேதியில் நடத்தவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஜூலை மாதத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு காலஅட்டவணை குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டது. அதில், இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க யுஜிசி பரிந்துரைத்தது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். கொரோனா ஆபத்து காரணமாக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் புதிய கல்வி அமர்வு நவமபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது .
“நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், பல்கலைக்கழகங்கள் 18.11.2020 க்குள் வகுப்பைத் தொடங்கலாம். ஆஃப்லைன் / ஆன்லைன் / இரண்டும் கலந்த (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று யுஜிசியின் வழிமுறைகள் கூறுகின்றன.
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இழந்த கல்வி கற்பித்தல் நாட்களை ஈடு செய்வதற்கு வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பொதுமுடக்க நிலை காரணமாக பெற்றோர்கள் சந்திக்கும் நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக, இடம் பெயர்வு போன்ற மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி வரை சிறப்பு நடவடிக்கையாக, செலுத்தப்பட்ட கட்டணங்கள் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும் என்று யுஜிசி வெளியிட்ட வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil