யுஜிசி-நெட் வினாத்தாள் கசிவு தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
ஜூன் 18ஆம் தேதி 317 நகரங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிய ஒரு நாளிலேயே கல்வி அமைச்சகம் தேர்வை ரத்து செய்ய இது வழிவகுத்தது.
தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம், என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) உள்ளீடுகளைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் என்ட்ரீ லெவல் ஆசிரியர் வேலைகள் மற்றும் பிஎச்டி சேர்க்கைக்கான முக்கியமான தேர்வை மையம் ரத்து செய்தது.
தேர்வு நாளில் (ஜூன் 18) மதியம் 2 மணியளவில் டெலிகிராம் சேனலில் UGC-NET வினாத்தாளின் ஸ்கிரீன் ஷாட் பரவிக் கொண்டிருந்தது, ஆனால் முதல் செஷனுக்கு முன்பே அது கசிந்ததாகக் கருத்துகள் தெரிவிக்கின்றன.
யுஜிசி-நெட் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும்; முதல் அமர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், இரண்டாவது அமர்வு மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெற்றது.
டெலிகிராம் சேனல்களில் நடந்த உரையாடல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் (I4C) கண்டறியப்பட்டு, ஜூன் 19 அன்று மதியம் 3 மணியளவில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (UGC) அனுப்பப்பட்டது. இந்த உள்ளீட்டின் அடிப்படையில், அன்றிரவு தேர்வை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது.
ஜூன் 23 அன்று, கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணையை எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக, வினாத்தாளின் ஸ்கிரீன்ஷாட் தேர்வுக்கு முன்பே கிடைத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில், கையாளப்பட்டதாக (manipulated), சிபிஐ கண்டறிந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வின் முதல் அமர்வுக்குப் பிறகு, மதியம் 2 மணியளவில் டெலிகிராம் சேனலில் ஒரு கேன்டிடேட் வினாத்தாளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்பது அறியப்படுகிறது.
பின்னர் இந்த புகைப்படம் தேர்வுக்கு முன்னதாகவே மக்களிடம் இருந்ததாகக் கூறப்பட்டது போல பிம்பம் உருவாக்கப்பட்டது.
”இது அடிப்படையில் ஒரு டெலிகிராம் சேனலால் நடத்தப்பட்ட மோசடியாகும், அங்கு தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், பணத்திற்குக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
பின்னர் முதல் அமர்வு முடிந்ததும், மோசடி செய்பவர்கள் அந்த வினாத்தாளின் புகைப்படத்தை ஒரு மாணவர் மூலம் ஏற்பாடு செய்து, அதை பதிவுசெய்து, தேர்வுக்கு முன்பு அவர்கள் வைத்திருந்தது போல் தோன்றும் வகையில் உடனடியாக ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பரப்பினர்.
இது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது, இதனால் அவர்கள் எதிர்காலத்தில் கூட பணம் சம்பாதிக்க முடியும்” என்று பெயர் வெளியிட விரும்பாத அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
இந்த அறிக்கையை கல்வி அமைச்சகத்திடம் சிபிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், நெட் தேர்வை ரத்து செய்த முடிவை அரசாங்கம் திரும்பப் பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை,
UGC சார்பாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்கனவே ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை மறுதேர்வுக்கான தற்காலிக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுஜிசி-நெட் வழக்கில் இதுவரை சிபிஐ யாரையும் கைது செய்யவில்லை.
ஆதாரங்களின்படி, டெலிகிராம் சேனலில் வினாத்தாள் கசிவு பற்றிய ஸ்கிரீன்ஷாட் மற்றும் டிஜிட்டல் டிரெயில் ஆகியவற்றின் பகுப்பாய்வு அடிப்படையில் செயல்பாட்டின் முறை புரிந்துகொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை டிசம்பர் 2018 முதல் கணினி அடிப்படையில் தேர்வை நடத்துகிறது என்றாலும், இந்த ஆண்டு மீண்டும் எழுத்து வடிவத்திற்கு திரும்பியது.
Read in English: UGC-NET ‘paper leak’: Evidence was doctored, finds CBI investigation
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“