பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் தலைவராகவும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதி மாநில ஆளுநர்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. அதோடு துணைவேந்தர்களாக கல்வியாளர்களை மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த விதியில் மாற்றங்கள் செய்து துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுத் துறையை சேர்ந்தவர்களும் இடம்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் துணைவேந்தர் தேர்வில் வேந்தரான ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும். இது தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். அங்கு துணை வேந்தர் நியமனத்தில் ஏற்கனவே அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
அதோடு புதிய விதிகள் பல்கலைக்கழக ஒப்பந்த ஆசிரியர்கள் தேர்விலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2018 பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகள் ஒரு நிறுவனத்தின் மொத்த ஆசிரியர் பதவிகளில் 10 சதவீதம் மட்டுமே ஒப்பந்த ஆசிரியர் நியமனங்களை செய்ய முடியும் என இருந்தது.
புதிய வரைவு விதிமுறைகள் அத்தகைய நியமனங்களுக்கான வரம்பை நீக்கியுள்ளது. உயர்கல்வி கட்டுப்பாட்டாளர் வரைவு பற்றிய பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு புதிய விதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: UGC eases hiring contract teachers, opens V-C post to non-academics too