2024 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தியா கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உலகத் தரவரிசைகளில் சிறந்த இடங்களை பெற்றுள்ளன.
இதற்கிடையில், ஒட்டுமொத்த கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தின. அந்த வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
பி.எம் வித்யாலக்ஷ்மி திட்டம்
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும். இது திறமையான மாணவர்களுக்கு நிதிச் சுமைகளை எளிதாக்குகிறது, அதாவது இந்தத் திட்டம், குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன்களை வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள சிறந்த 860 கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ரூ.3,600 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிதிக் கட்டுப்பாடுகள் தரமான கல்விக்கான அணுகலைத் தடுக்க கூடாது என்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி உதவித்தொகை திட்டம்
பிரதான் மந்திரி உதவித்தொகை திட்டம் (PMSS) என்பது ஏ.ஐ.சி.டி.இ (AICTE), யு.ஜி.சி (UGC) அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களை இலக்காகக் கொண்ட திட்டமாகும். இத்திட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.2,500 மற்றும் மாணவிகளுக்கு ரூ.3,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பைப் பொறுத்து, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. நிதி வரம்புகளைத் தணிப்பதன் மூலம், பொருளாதாரத் தடைகள் இன்றி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதையும், திறனை வளர்ப்பதையும் உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டம்
கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வேலை வாய்ப்புடன் நிறைவு செய்யும் வகையில், மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு நடைமுறை வெளிப்பாடு மற்றும் தொழில்முறை அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பங்கேற்பாளர்கள் பல்வேறு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை கொண்ட தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்பைப் பெறுகிறார்கள்.
கல்விக் கடனுக்கான வட்டி மானியம்
உயர்கல்விக்கான அணுகலை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய, அரசாங்கம் 2024-25 பட்ஜெட்டில் வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் இ-வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும் 3% வட்டி மானியத்துடன் உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன்களைப் பெறலாம். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டம், குடும்பங்கள் மீதான நிதிச்சுமையைக் குறைத்து, அதிகமான மாணவர்கள் தங்கள் கல்வி கனவுகளைத் தொடர உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பி.எம் ஸ்ரீ பள்ளிகள்
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் கட்டமைப்பை உருவாக்கி, பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டம் நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் இந்தப் பள்ளிகள், முழுமையான மற்றும் உள்ளடக்கிய கல்விக்கு எடுத்துக்காட்டுகளாக செயல்படும். அதிநவீன உள்கட்டமைப்பு முதல் புதுமையான கற்பித்தல் வரை, பி.எம் ஸ்ரீ பள்ளிகள் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மறுவரையறை செய்வதாகவும், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் பண்பு மேம்பாட்டை வளர்ப்பதாகவும் உறுதியளிக்கின்றன.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்
ஒரே நாடு ஒரே சந்தா (ONOS) திட்டம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முக்கிய திட்டமாகும். மூன்று ஆண்டுகளில் ரூ.6,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில், நாடு தழுவிய கல்வி இதழ்கள், மின் புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தரவுத்தளங்களுக்கான அணுகலை வழங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் ஆராய்ச்சி வெளியீட்டை மேம்படுத்தவும், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் முயல்கிறது. மாணவர்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த டிஜிட்டல் புரட்சியின் மூலம் மகத்தான லாபத்தைப் பெறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.