இரட்டை இலை சின்னம் கோரிய தினகரனின் வழக்கில் இன்று தீர்ப்பினை வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று இந்த தீர்ப்பினை வழங்குகிறது டெல்லி உயர் நீதிமன்றம்.
இந்த அமர்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் தீர்ப்பு வழங்க இருந்தனர். முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மரணமடைந்த பின்பு, கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட்டது. அதன் விளைவாக கட்சி இரண்டாக பிரிந்தது.
பின்பு ஆர்.கே. நகர் தொகுதியின் போது தினகரனின் அமமுக கட்சிக்கும், அதிமுக கட்சிகும் இடையில் இரட்டை இலை சின்னத்திற்கான உரிமைப் போராட்டம் ஏற்பட்டது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு ?
பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு 2017, நவம்பர் 23ம் தேதி இரட்டை இலை சின்னம் முதல்வர், துணை முதல்வர் தரப்பினருக்கு கிடைத்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல் முறையீடு செய்தார்.
அதன் பின்பு, தினகரன் அமமுக கட்சி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னத்தினையே ஒதுக்கித் தரக் கோரி தினகரன் மனு அளித்தார்.
இவ்விழக்கில் 4 வாரங்களுக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை வழங்கவில்லை என்றால், தினகரன் மனுவின் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லி உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கே என்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி, சசிகலா மற்றும் தினகரன் தனித்தனியே அளித்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளி வருகின்றன.
மேலும் படிக்க : திமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதி செய்யப்படுமா ?
உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் – இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பிறகு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.