மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் : நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபடாமல் இருந்தது. சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில் கடைசி 7 வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் மே 19ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் வரும் இன்று முதல் தொடங்குகிறது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ் பெற கடைசி நாள் மே 2 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி கனியை பறிக்க அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன் ராஜ், ஒட்டப்பிடாரத்தில் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியானது, மக்கள் நீதி மய்யம் கட்சி உடன் கூட்டணி வைத்துள்ள வளரும் தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.