நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்தே 303 இடங்களை வென்றது. அக்கட்சியின் இரண்டாவது பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்த தேசியத் தலைவர் அமித் ஷாவை சுற்றி அரசியல் வட்டாரத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, அமித் ஷா அமைச்சரவையில் இடம் பெற்றால், பாஜகவின் அடுத்த தலைவர்?
விஷயம் என்னவெனில், மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் அமித் ஷா இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த பாஜக தலைவர்கள் கூறுகையில், அமித் ஷாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை எந்த க்ளூவும் தெரியவில்லை. அவரும், மோடியும் அது குறித்த எந்தத் தகவலையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்" என்றனர்.
ஆனால், குறைந்தது மூன்று பாஜக தலைவர்களாவது இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அளித்த தகவல் என்னவெனில், அமித் ஷா பாஜக அரசில் இடம் பெற வாய்ப்புள்ளது; கட்சியின் தலைவராக அவர் தனது உச்சக்கட்ட பங்களிப்பை செய்துவிட்டார்.
ஆனால், இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து எந்தவொரு சிக்னலும் கிடைக்கவில்லை. தங்களின் முடிவுகளுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிவாதத்தை நிச்சயம் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்" என்றனர்.
ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, அமித் ஷா பாஜக தலைவர் பதவியை 2015 ஜூலை மாதம் ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஜனவரி 2016ல் அமித் ஷா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, அவரது மூன்று வருட கால பணி கடந்த ஜனவரியோடு நிறைவடைந்தது. ஆனால், மக்களவை தேர்தல் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இருப்பினும், இதுவரை தலைவர் பதவிக்கு எந்தவொரு பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. மோடி மற்றும் அமித் ஷா ஜோடி தான் இந்த தேர்தலின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம். புதிய தலைவராக பதவியேற்றுக் கொள்பவரும் மோடியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு வேலை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
அமித் ஷாவை பொறுத்தவரை, நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கு பகுதிகளில் பாஜக பெற்ற பிரம்மாண்ட ஆதரவு, தென்னகத்தில் கர்நாடகவைத் தவிர மற்ற மாநிலங்களில் கிடைக்காததால் தனது பணி முழுமையடையவில்லை என நினைக்கிறார்.
இருப்பினும், அந்த சோகத்தை தேர்தலில் பெற்ற மெகா வெற்றி மறைத்துவிட்டது. வெற்றிக்குப் பிறகு மோடியும், அமித் ஷாவும் கட்சியின் மிக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். இதுகுறித்து பாஜக தலைவர் கூறுகையில், "எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்ற கட்சியின் மூத்த தலைவர்களிடம் இதுபோன்று ஆசிர்வாதம் வாங்குவது எங்கள் கட்சியின் கலாச்சாரம். இருவரும் மிக அபாரமாக தேர்தல் பணி செய்து, இந்த மந்திர வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர்" என்றார்
பிரதமர் தனது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை சமூக தளங்களில் பதவிட்டிருந்தார். இம்முறை, அமித் ஷா அத்வானியின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
மத்தியில் இப்போதுள்ள எதிர்பார்ப்பு என்னவெனில், யார் யாரெல்லாம் மோடி அரசின் இரண்டாவது அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார்கள் என்பதே. ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்த ஸ்மிரிதி இராணியின் பெயர் இதில் அடிபடுகிறது.
இராணியின் இந்த வெற்றி, இந்திரா காந்தியை வீழ்த்திய ராஜ் நரைன் வெற்றிக்கு இணையாக கட்சியில் ஒப்பிடப்படுகிறது. எமெர்ஜென்சி காலத்திற்குப் பிறகு, ராகுல் காந்தியின் பாட்டி, 1977ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்மிரிதி இராணிக்கு அமைச்சரவையில் முக்கியமான துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.