திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை கேட்டிருக்கிறார்கள்? அந்தத் தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? என்கிற விவரம் கிடைத்திருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தனது இடத்தை உறுதி செய்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 இடங்களும், புதுவை மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட இருக்கும் 9 தொகுதிகள் விவரம் தெரிய வந்திருக்கிறது. அவை வருமாறு..
1. கன்னியாகுமரி
2. விருதுநகர்
3. சிவகங்கை
4. ராமநாதபுரம்
5. தேனி
6. சேலம்
7. ஈரோடு
8. காஞ்சிபுரம்
9. திருநெல்வேலி
கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கிய வசந்தகுமார் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால், ஒரு இடைத்தேர்தலை திணிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ஃபுரூஸ் வேட்பாளர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி தொகுதி- பீட்டர் அல்போன்ஸ், விருதுநகர் - மாணிக்கம் தாகூர், சிவகங்கை- ப.சிதம்பரம் அல்லது கார்த்தி சிதம்பரம், ராமநாதபுரம் - திருநாவுக்கரசர், சேலம் - தங்கபாலு, தேனி - ஆரூன், காஞ்சிபுரம் -விஸ்வநாதன், ஈரோடு - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் 5 செயல் தலைவர்களுக்கும் சீட் இல்லை என தெரிகிறது. தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து கட்சியை ஜெயிக்க வைக்கும் பணியை செய்தால், சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
எனினும் செயல் தலைவர்களான விஷ்ணு பிரசாத், ஜெயகுமார், மயூரா ஜெயகுமார் ஆகியோர் எம்.பி. சீட் பெறுவதற்கான தீவிர முயற்சியை இன்னும் கை விடவில்லை. கடைசி நேரத்தில் மேற்கண்ட பட்டியலில் மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.