தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. யார் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கருத்துக் கணிப்புகள் முடிவுகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. தேர்தலுக்கு முன், பின் என இரண்டு கருத்து கணிப்பு முடிவுகளும் திமுகவுக்கே தேர்தல் முடிவுகள் சாதகமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துவருகின்றன.
ஒருவேளை திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் யார்யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பல ஊகங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. திமுகவினர் அமைச்சரவையில் இடம் பிடிக்க பல்வேறு வழிகள் மூலம் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சரவை பட்டியல் ஒன்று தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகின. அதில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிய திமுக முக்கிய பிரமுகர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே அடுத்து ஆட்சி அமைக்க போகும்போது இந்தப் பதவி இவருக்குத்தான் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக திமுகவினர் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதில் சபாநாயகர் பதவியை இந்த முறை பெண் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க விரும்புவதாக தெரிகிறது. அதிலும் திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு வழங்க வேண்டும் என ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மூத்த அரசியல்வாதியான சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு . அவரது அனுபவத்துக்கு ஏற்ற பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் இந்த தேர்தலில் அவரை போட்டியிடச் செய்துள்ளார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்காத நிலையிலும், ஸ்டாலின் வலியுறுத்தவே அவர் போட்டியிட்டுள்ளார். தகுதி வாய்ந்த சீனியர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐபேக் நிறுவனமும் சுப்புலட்சுமி ஜெகதீசன் குறித்து பாசிட்டிவான ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
அடிப்படையில் ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் 1977ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று, எம்ஜிஆர் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் அவர் அங்கிருந்து திமுகவுக்கு திரும்பினார். 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1991ஆம் ஆண்டு தடா சட்டத்தில் கைதாகி 9 மாதங்கள் சிறையில் இருந்தார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில் இவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு சபாநாயகர் பதவி இவருக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டால் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை சுப்புலட்சுமி ஜெகதீசன் பெறுவார். மேலும் தற்போதைய சபாநாயகர் தனபால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர், அதனால் அந்தப் பதவிக்கு அதே மண்டலத்தைச் சேர்ந்தவரை ஸ்டாலின் கொண்டுவருகிறார் என்றும் கட்சிக்குள் பேச்சு எழுகிறது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகர் பதவியை ஏற்றால் அவர் தற்போது வகிக்கும் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார். அந்த பதவி வேறொரு பெண் நிர்வாகிக்கு செல்லும். அது யாருக்கு என்ற விவாதமும் திமுகவுக்குள் தொடங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil