Lok Sabha Elections 2019 Rahul Gandhi Contesting from Wayanad explained : ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் எப்போதுமே வட இந்தியாவை மையமிட்டே போட்டியிடுவார்கள். நேரு காந்தி குடும்ப உறுப்பினர்கள் தென்னிந்தியாவில் போட்டியிடுவது முதல் முறையில்லை. ஆனால் , கேரளாவில் போட்டியிடுவது இது தான் முதல் முறை.
காங்கிரஸ் தரப்பில் இருந்து கேரளத்தில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று தெரிந்த நாளில் இருந்தே, அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த ஆரவாரத்தில் கட்சிப் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெரும் படை சூழ, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய சகோதரி ப்ரியங்கா காந்தியுடன் வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார்.
தனிப்பட்ட காரணம் என்ன ?
1991ம் ஆண்டு ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட போது, அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தியை கரைக்க நதிகளை தேடிய போது, வயநாடு தொகுதியில் அமைந்திருக்கும் திருநெல்லி பகுதியில் உள்ள பாபநாசினி ஆற்றில் ராஜீவ் காந்தியின் அஸ்தியை கரைக்க முடிவு செய்தனர்.
தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படும் இந்த பகுதியில் அமைந்திருக்கும் ஆற்றில் தான் ஏ.கே. அந்தோணி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. இன்று அதே தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்ணீர் மல்க நினைவுபடுத்தினார் ரமேஷ் சென்னிதலா.
ராகுல் காந்தி தென்னிந்தியாவை தேர்வு அரசியல் செய்ய காரணமென்ன ?
வயநாடு தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடக என்று மூன்று மாநில எல்லைகளை தழுவிய மலைப் பிரதேசமாக இருக்கின்றது. தென் இந்தியாவில் ஒரு சிறப்பான மையத்தை உருவாக்கிட காங்கிரஸ் திட்டமிட்டதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி, கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி என்று இருந்தாலும், தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் காங்கிரஸின் செயல்பாடும் கட்சியின் அதிகார மையமும் அவ்வளவு எளிதாக வேர்பிடிக்கவில்லை.
மேலும் கர்நாடகாவில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என கர்நாடக காங்கிரஸாரும், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸாரும் தொடர்ந்து விருப்ப மனுக்களை முன் வைத்தனர். ஆனாலும் ராகுல் காந்தி கேரளாவை முன்னிறுத்த கட்சிப் பொறுப்புகளும் முக்கிய காரணமாய் அமைகின்றன.
கேரள காங்கிரஸ் இரண்டு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கேரள காங்கிரஸ் தலைவராக இருக்கும் ரமேஷ் சென்னிதலாவிற்கும், முன்னாள் முதல்வராக பணியாற்றிய உம்மன் சாண்டிக்கும் இடையே அதிகார மையம் குறித்த போட்டி நிலவுவதாலும் காங்கிரஸ் நேரடிப் பார்வை இந்த மாநிலத்தில் தேவை என்பதை கருத்தில் கொண்டும் போட்டியிட்டுள்ளார் ராகுல் காந்தி.