Lok Sabha Election 2019: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "மக்களவைத் தேர்தலையொட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
தி.மு.க. கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆர்.எம். வீரப்பன், சுப. வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, எஸ்றா சற்குணம், செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், பார்வர்ட் பிளாக், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி" என்றார்.
அப்போது, தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'தேமுதிக விவகாரம் பற்றி பொருளாளர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதால், அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். பரபரப்பை ஏற்படுத்துவதற்காக கேட்கும் கேள்விகளுக்கு, நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை' என்றார்.
ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ஆவணத்தையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். அடிக்கடி தமிழகம் வரும் மோடி , தேர்தலுக்காக ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.
தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "திமுக சார்பில் நடத்தப்பட்ட 12,500 கிராமசபை கூட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம். திமுக வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்ட பிறகு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பது கண் கூடாக தெரியும்"என்றார்.
நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று நம்புகிறோம். ஆனால், இடைத்தேர்தலை அதிமுக மற்றும் பாஜக தடுக்க முயற்சி செய்து வருகின்றன. இது ஜனநாயகப் படுகொலை. 21 சட்டமன்ற இடைத்தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்டால், அத்தனை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் கூறினார்.