scorecardresearch

முகிலன் எங்கே? சமூக வலைதளங்களில் வலுக்கும் குரல்

mugilan missing: முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

Tamil Nadu news today
Tamil Nadu news today

where is mugilan: தேர்தல் கூட்டணி விவகாரங்களுக்கு மத்தியில் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம், தமிழ்நாட்டில் புதிய அதிர்வுகளை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக, ‘முகிலன் எங்கே’ என்கிற பொருள் படும்படி #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

முகிலன், தமிழ்நாடு அறிந்த செயல்பாட்டாளர். இவர் வெளியில் இருக்கிற நாட்களைவிட, சிறையில் இருக்கிற நாட்களே அதிகமாக இருக்கும். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தியவர்.

mugilan social activist missing, முகிலன், செயற்பாட்டாளர்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றிலும் இவரது பங்கு உண்டு. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார்.

பிறகு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. இது தொடர்பாக மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் ஹென்றி டிஃபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். பல்வேறு அமைப்பினரும் அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி போலீஸில் புகார் மனுக்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கும்படி ரயில்வே போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த ட்விட்டர் பதிவில், ‘சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல் போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.

கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!’ என கூறியிருக்கிறார்.

திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவில், ‘சூழலியலாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு ‘திட்டமிட்ட அரசின் சதி’ என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்!’ என கூறியிருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தனது ட்வீட்டில், கரு.பழனியப்பன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ‘கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் முகிலன் இப்படி காணாமல் போயிருக்க மாட்டார்’ என்று பேசியுள்ளார்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுத்து பிரபலமான சோபியா தனது ட்வீட்டில், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்டது என்று ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர்களை வெள்ளிக்கிழமையன்று சந்தித்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் முகிலனை அன்று இரவு முதல் காணவில்லை’ என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி குரல்கள் எழுந்தபடி இருக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Mugilan social activist missing