நாம் தமிழர் வேட்பாளர்கள்: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைதேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவை இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த மார்ச் மரணமடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 தொகுதிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலில் வெற்றி கனியை பறிக்க அரசியல் கட்சிகள் தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா, சூலூர் - வெ.விஜயராகவன், அரவக்குறிச்சி - பா.க.செல்வம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதியில் பெண் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
நாம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நான்கு பேரும் 2 தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக