Kanniyakumari BY Election Candidate Pon.Radhakrishnan : தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டில் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள் நிலையில், கடந்த 3 நாட்களாக தேசிய கட்சியான பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. பலத்த இழுபறியில் நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகளுக்கு பட்டியல் கொடுத்த பாஜக, அதில் 40 தொகுதிகள் கேட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்க அதிமுக தயாராக இல்லை என்று தகவல் வெளியானது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நேற்று இரவு பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்பட்டு தமிழக சட்டசபையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்த குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலுடன், கன்னியாகுமாரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தொகுதியில், முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்னவே கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சராக பணியாற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்து குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்த தொகுதியில், பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"