TN Assembly Election DMK Candidate Senthil Balaji Campaign : தேர்தல் பிரச்சாரத்தில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மணல்கொள்ளை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந்’ தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அ.தி.மு.கவும், கடந்த 2 முறை விட்ட ஆட்சியை திமுக இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னணி கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கரூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் கரூர் தொகுதியில் மீண்டும் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர், கரூர் பேருந்து நிலையத்தில் பேசுகையில்,
வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றதும் ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதவியேற்றார் என்றால், 11.05 மணிக்கு மாட்டுவண்டியை எடுத்துக் கொண்டு நீங்கள் ஆற்றுக்குள் ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் உங்களைத் தடுக்க மாட்டான். தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்கே இருக்க மாட்டார்கள் என்று பேசியுள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த பேச்சுக்கு திமுகவினர் ஆரவாரம் செய்து கை தட்டுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"