Tamilnadu Assembly Election MNM Candidate Ponraj Conrana Positive : முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சின் அண்ணா நகர் தொகுதியின் வேட்பாளரான விஞ்ஞானி பொன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி குறுகிய காலத்தில் தமிழகத்தில் பெரும் பிரபலமடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. மேலும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதனைத்தொடர்ந்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்ராஜ்-க்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,
அன்பு நண்பர்களே,
நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, YouTube மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். ZOOM MEETING மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்.
மிக்க நன்றி
வெ. பொன்ராஜ்
அண்ணா நகர் தொகுதி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்
என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரும், வேளச்சேரி தொகுதி வேட்பாளருமான சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்ராஜூடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் பொன்ராஜ் இருந்துள்ளார். இதனால் கமல்ஹாசனுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"