Tamilnadu Assembly Election 2021 : தான் வெற்றி பெற்றதும் 3 வருடங்களில் மக்களின் குறைகளை தீர்ப்பதாகவும், அப்படி இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பிரமாண உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட உள்ளார்.
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் நோக்கில் தீவிரமாக பிரச்சார பணியாற்றி வருகின்றனர். இதில் பல வேட்பாளர்கள் தங்களது தொகுதி மக்களை கவர அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, அவர்களுடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடுவது, ஹோட்டலில் தோசை சுடுவது என பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் செய்யும் இந்த செயல்களுக்கு மக்கள் மத்தியில் அதிகவரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக பிரமாண உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி குறுகிய காலத்தில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தனித்து சந்தித்த மக்கள் நீதி மய்யம், தற்போது சட்டமன்ற தேர்தலை சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தர்லுக்காக அக்கட்சியின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆ,பொன்னுசாமி அந்த, 35வது வார்டுக்குட்பட்ட எருக்கஞ்சேரி பகுதியில் இன்று (ஏப்ரல் -3) காலை 9.00மணியளவில் நடைபயணமாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கூவம் கால்வாய் தடுப்பு சுவர் இன்றி, குப்பைகள் நிறைந்து, சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக திகழ்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சி நிர்வாகிகளோ, தற்போதைய சட்டமன்ற உறுப்பினரோ கூட நேரில் வந்து பார்த்து எங்களது குறைகளை செவிமடுக்க, அதனை நிவர்த்தி செய்ய தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய வேட்பாளர் ஆ.பொன்னுசாமி, தான் வெற்றி பெற்று வந்த உடன் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்ததோடு, இன்று தன்னுடைய தேர்தல் வாக்குறுதி தொடர்பான பிரமாண உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடும் நிகழ்விற்கு நேரில் வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இந்த பத்திரத்தில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil