தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 38 தொகுதிகளில் 37ல் திமுக கூட்டணி பெரும் வெற்றிப் பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், தி.மு.க. மக்களவை குழுத் தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. மக்களவை குழு துணைத் தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தி.மு.க. மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா,
மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை தி.மு.க. கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில், மக்களே எஜமானர்கள். மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.