/indian-express-tamil/media/media_files/2025/08/17/actress-caroline-2025-08-17-15-10-06.jpg)
திடீர் மயக்கம், இதயம் வேலை செய்யல... தன்னையே மறந்த பிரபல சீரியல் நடிகை; தற்போதைய நிலை என்ன?
சின்னத்திரை உலகில், துள்ளலான பேச்சும், இயல்பான நடிப்பும் கொண்ட முகம் என்றால் அது நடிகை கரோலின். வி.ஜே-வாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அவர். ஆனால், ஒரு கலைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். கரோலின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு இருண்ட நாள் வந்தது. அது வலிப்புடன் தொடங்கியது.
அண்மையில் டெலி விகடன் யூடியூப் சேனலில் நேர்க்காணலில் ஒன்றில் பங்கேற்ற நடிகை கரோலின் தனது வாழ்கை அனுபவங்கள் குறித்தும், தனக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை குறித்தும் பகிர்ந்துகொண்டார். வழக்கமான படப்பிடிப்பு, உற்சாகமான சூழல்... எல்லாம் இயல்பாக இருந்த ஒரு நாளில்தான், திடீரென வலிப்பு ஏற்பட்டது. தன்னையே மறந்து, சுயநினைவு இழந்தேன். இது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை உணர்ந்த என் குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நிலைமையின் தீவிரத்தைக் கண்ட மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்தனர். அந்த சமயத்தில், வலிப்புக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்களாலும் உறுதியாகக் கூற முடியவில்லை. இது, குடும்பத்தினரை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது என்று கரோலின் தெரிவித்தார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, கண் விழித்தபோது, உடல்நலம் தேறியிருந்தேன். ஆனால் நினைவுகளை இழந்திருந்தேன். கலைஞனுக்கு அவனது நினைவுகள்தான் ஆதாரம்; அதுவே அடையாளம். ஆனால், எனக்கு அது இல்லை. புதிய, நினைவில்லாத வாழ்க்கையை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. வலிப்புக்கான காரணம் என்ன என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது என்று கரோலின் பகிர்ந்து கொண்டார்.
இந்த துயரமான காலகட்டத்தில், குடும்பத்தினர் எனக்கு அரணாக நின்றனர். இவர்களைத் தவிர, சின்னத்திரை உலகில் இருந்து சிலர் நம்பிக்கையின் கரமாக இருந்தனர். சக கலைஞர்கள் அளித்தது வெறும் ஆறுதல் மட்டுமல்ல, மீண்டும் அவர் தனது பாதையில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையும் தான் என்று கூறினார் கரோலின்.
இன்று, கரோலின் மெதுவாக உடல்நலம் தேறி வருகிறார். நடிப்பதுதான் அவரது உயிர் மூச்சு, அதுதான் அவரது கனவு. வீட்டிலேயே இருப்பது அவருக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திடீரென ஏற்படும் தடைகள் கலைஞனின் பயணத்தை நிறுத்தாது, மாறாக, அது அவனது மன வலிமையையும், கனவுகளின் மீதான பற்றையும் அதிகரிக்கும் என்பதை நினைவூட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.