நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஆடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் அமலாவின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்தப் படத்தை ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்க, ‘வீ ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி காலையில் வெளியாக இருந்த இப்படம் ஃபைனான்ஸியல் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டதால், அன்றைய தினத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஒருவழியாக பிரச்னை சரிசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் ‘ஆடை’ திரைப்படம் வெளியானது.
குறிப்பாக இப்படத்தின் ட்ரைலரில் அமலா பால் ஆடை இல்லாமல் தோன்றும் காட்சி, படத்தின் மேல் ஒரு நெகட்டிவ் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் பலரும் இதனை எதிர்த்தனர். ஆனால் ரிலீஸான பிறகு, ‘ஆடை’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதில் ஆபாசமாக எதுவுமில்லை என்றனர்.
இந்நிலையில் தனது கதாபாத்திரத்திற்குக் கிடைக்கும் வரவேற்பை நேரடியாக காண ஆசைப்பட்டார் அமலா பால். விவேக் பிரசன்னா உள்ளிட்ட குழுவினருடன் திரையரங்குக்கு சென்ற அமலா பால், மீடியா ஆள் போல, கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு, அனைவரிடமும் கருத்துக் கேட்டிருக்கிறார். தலையில் தொப்பியும், கண்ணில் கண்ணாடியும் அணிந்திருந்ததால், ரசிகர்களால் அவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஒரு கட்டத்தில் அமலாவே தனது தொப்பியை கழட்டியவுடன், கருத்து சொல்லிக் கொண்டிருந்த பெண் வாயடைத்துப் போகிறார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.