பெட்ரோல் பங்க் வேலை, கட்டுமானப் பணி... சாக்லேட் பாய் அப்பாஸ் இப்போ இப்படித்தான்!
Tamil-Telugu Star Abbas left to New Zealand and lives with family Tamil News: நடிகர் அப்பாஸ் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் முதலில் வேலை செய்துள்ளார்.
Actor Abbas Tamil News: 90'களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பிறந்த இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். தமிழில் 1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான 'காதல் தேசம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.
Advertisment
இந்த படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர் வாய்ப்புகள் குவிந்தன. கூடவே பெண் ரசிகர்களும் அதிகரித்தனர். இதனால், அவர் தமிழில் நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்தன. குறிப்பாக, 'விஐபி', 'மின்னலே', 'பூச்சூடவா', 'பூவேலி', 'படையப்பா', 'சுயம்வரம்', 'மலபார் போலீஸ்', 'திருட்டுப்பயலே' உள்ளிட்ட பல படங்கள் வசூல் சாதனை செய்தன.
தமிழில் வெளியாகிய 'காதல் தேசம்' படம் தெலுங்கிலும் (பிரேம தேசம்) வெளியாகிய நிலையில், படம் அங்கும் படு ஹிட் அடித்தது. இதனால் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கில் இவர் நடித்த "ப்ரியா ஓ ப்ரியா" மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதன்பிறகு அவர் கன்னடம், இந்தி சினிமாவிலும் ஒரு வலம் வந்தார்.
நடிகர் அப்பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலககினார். தமிழில் இறுதியாக 'ராமானுஜன்' படத்தில் சிறு கதாபாத்திரத்திலும், அதன் பிறகு சில விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்.
சினிமாவுக்கு முழுக்கு போட்ட பெண்களின் கனவு நாயகன் அப்பாஸ், இப்போது என்னதான் செய்கிறார்? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வரும் நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார். மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள்.
நடிகர் அப்பாஸ் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் முதலில் வேலை செய்துள்ளார். பின்னர் தான், கட்டுமானத் துறையில் ஒரு முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு பணியமர்ந்து இருக்கிறார். தற்போது அவர் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளராகவும் உருவெடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் அப்பாஸ் தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடித்து 8 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவர் மீண்டும் நடிக்க தற்போது வரை அவரிடம் எந்த திட்டமும் இல்லை என அவரது ரசிகர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“