நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சின்னி ஜெயந்த் தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990களில் வெளியான படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றார். பல படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாக முக்கிய பாத்திரங்களில் நடித்த நடிகர் சின்னி ஜெயந்த், தனது மிமிக்கிரியால் முத்திரை பதித்தவர். முரளி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள் சின்னி ஜெயந்த் இடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றிருந்தார். அதில் அவர் இந்திய அளவில் 75வது ரேங்க் பெற்றார். சின்னி ஜெயந்த் மகன் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றதற்கு அப்போது சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக (உதவி மாவட்ட ஆட்சியர்) பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவருடைய தந்தை சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முன்னதாக, ஸ்ருதன் ஜெய் நாராயணன் தான் சப் கலெக்டராக பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.