சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் இரண்டம் குத்து படத்தின் டீஸர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா, பிரபல பைக் ரேசர் அலிஷா அப்துல்லா ஆகியோர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், 'வெற்றிக் கொடி கட்டு','ஆட்டோகிராப்' , 'தவமாய் தவமிருந்து' போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குனர் சேரன் 'இரண்டம் குத்து' திரைப்படம் தொடர்பான தனது அதிருப்தியை பதிவு செய்தார்.
ட்விட்டர் பயனர் ஒருவர், "இரண்டாம்குத்து எனும் படம் உங்க திரை உலகுக்கே கலங்கம் கற்பிப்பது. சொரியான் வழியில் free sex culture, முற்போக்குன்னு சொல்லி தலைமுறைகளையே சீரழிக்கிறது. இன்றும் திரைமீது மதிப்பிருக்க காரணம் உங்களைப் போன்ற இயக்குனர்களே.
இதற்கு உங்கள் கண்டனம் தேவை" என்று சேரனிடம் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சேரன், " மக்கள் இதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும்.. ஏற்கனவே முதல் குத்துக்கு கலெக்ஷனை அள்ளிக்கொடுத்ததால்தான் இந்த தைரியம் வருது… ஆனாலும் அந்த போஸ்டர் அருவருப்பான ஆபாசம்.. கண்டிப்போம்.. அதை வேறறுப்போம்.. அரசும் இதுபோன்ற படங்களை தடைசெய்யனும் " என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாரதிராஜாவின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த சந்தோஷ் ஜெயக்குமார், பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டு, ” இத பாத்து கூசாத கண்ணு, இப்போ இப்ப கூசிருச்சோ” என்று பதிலளித்தார் .
இருப்பினும், அடுத்த நாளே இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் பாரதிராஜாவிடம் தனது மன்னிப்பை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.” என்று சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்தார்" என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.