பாரத் ஜோடோ யாத்திரை தேசத்துக்கான நடைபயணம், இதில் டெல்லிவாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை இன்று (சனிக்கிழமை, டிச.24) தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. இந்த யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.
முன்னதாக காணொலி வாயிலாக குறுஞ்செய்தி ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில், வணக்கம், பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ள கூறி ராகுல் காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில் என்னை ஒரு சக குடிமகனாக குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக, இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்கும் முயற்சியாக கருதுகிறேன்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த முன்னெடுப்பில் டெல்லிவாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இது தேசத்துக்கான நடைபயணம். டிச.24 தலைநகருக்கு வருகிறேன்.
உங்கள் அனைவரையும் சந்திக்க உள்ளேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம். நாளை நமதே. ஜெய்ஹிந்த் எனக் கூறியுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை நேற்று ஹரியானாவில் நிறைவுற்றது. அப்போது திமுக மக்களவை எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/