புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் ஒரு வாரத்துக்கும் மேல் போராடி வருகின்றனர். நடிகர் கார்த்தி விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் ஒரு வாரத்துக்கும் மேல் கடுமையாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தலைவர்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற 4வது கட்ட பேச்சுவார்த்தை எந்த தீர்வையும் எட்டாமல் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது உழவன் அமைப்பு மூலம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” என்று திருக்குறளை மேற்கோள் காட்டி, நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும் பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.
நாளும் பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலை தூரம் பயணித்து வந்து வீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.
தண்ணீர் பற்றாக்குறை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படையும் என கருதுகிறார்கள்.
தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும் தங்கள் விளை பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெருமுதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும் ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”