அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெறி, மெர்சல் படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி மூன்றாவதாக இணைகிறது. இதில் விஜய்யின் 63வது படமாகும். அட்லீ சொன்ன கதையை கேட்டு தீவிர ஆலோசனைக்குப் பிறகு விஜய் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள 'தளபதி 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
நயன்தாரா ஹீரோயினாக நடிக்க விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே முடிவாகி இருந்தது. மற்ற தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் கதிர். 'விக்ரம் வேதா' படத்தில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதனை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.