New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/11/kingkong-sankar-2025-07-11-11-16-13.jpg)
"பிரபலங்களிடமிருந்து பொருளாதார ரீதியாக உதவி எதிர்பார்த்து பத்திரிகை கொடுத்ததாக பலர் கூறினார்கள். ஆனால், அப்படி ஒரு உதவியை நாடி நான் பத்திரிகை வைக்கவில்லை" என்று நடிகர் 'கிங்காங்' சங்கர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் கோலிவுட் நட்சத்திரம் 'கிங்காங்' சங்கர் மகள் திருமணம் தான் டாக் ஆஃப் தி டவுன் (Talk of the town)-ஆக உள்ளது. சினிமா தொடங்கி அரசியல் வரை பல பிரபலங்களுக்கு தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை நேரில் சென்று 'கிங்காங்' சங்கர் வழங்கி வந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதமாக ட்ரெண்டாகி வருகிறது. இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். எனினும், இதற்கு சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த விமர்சனங்கள் ஒருகட்டத்தில் ட்ரோல்களாகவும், தனி மனித தாக்குதலாகவும் மாறியது. ஆனால், தமிழில் ரஜினிகாந்த் முதல் பாலிவுட்டில் ஷாருக்கான் வரை அனைத்து நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ஒரு முன்னணி நடிகர், நிச்சயம் இவ்வளவு பேருக்கு பத்திரிகை வைக்க வேண்டும் என்று பலர் ஆதரவு குரல்களையும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தன் மீது வைக்கப்பட்ட ட்ரோல்கள் குறித்து நடிகர் 'கிங்காங்' சங்கர் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இது குறித்து 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக பத்திரிகை கொடுக்கும் வேலைகளில் தான் கவனம் செலுத்தி வந்தேன். இரவு தூங்குவதற்கு கூட சரியாக நேரம் கிடைக்கவில்லை. நண்பர்கள் அனைவரும் துணையாக இருந்து அனைத்து பணிகளையும் பார்த்துக் கொள்வதாக தைரியம் கொடுத்தனர்.
அனைத்து பிரபலங்களுக்கும் பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்யவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆகியோருக்கு மட்டுமே பத்திரிகை கொடுக்கலாம் என்று யோசனை தான் முதலில் இருந்தது.
அன்புமணி ராமதாஸுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக எனது நண்பர் அழைத்துச் சென்றார். அவருக்கு பத்திரிகை கொடுத்ததை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இப்படி அடுத்தடுத்து பலரையும் சந்தித்து பத்திரிகை கொடுத்தோம். இதுவே பின்னர் பேசுபொருளாக மாறியது.
ஒரு அப்பாவாக என்னுடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பிரபலங்களிடமிருந்து பொருளாதார ரீதியாக உதவி எதிர்பார்த்து பத்திரிகை கொடுத்ததாக பலர் கூறினார்கள். ஆனால், அப்படி ஒரு உதவியை நாடி நான் பத்திரிகை வைக்கவில்லை. எனினும், சிலர் உதவி செய்தனர்.
அனைவரும் நிச்சயம் திருமணத்திற்கு வருகை தந்து ஆசீர்வாதம் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கிங்காக் சங்கர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.