நடிகர் லிவிங்ஸ்டன் தான் கிறிஸ்டியன் ஆக இருந்து இப்போது இந்து மதத்திற்கு மாறி இருக்கிறேன் என்று கூறியதோடு, அதற்கான அதற்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார். இந்த காரணம் தற்போது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் லிவிங்ஸ்டன். முன்னதாக, லிவிங்ஸ்டன் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். லிவிங்ஸ்டன் ஆரம்ப காலத் திரைப்படங்களுக்கு இவருடைய பெயர் ராஜன் என்று பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் லிவிங்ஸ்டனுக்கு நடிக்க வாய்ப்பு விஜயகாந்த் மூலமாக கிடைத்தது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். காரணம் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையிலிருந்து லிவிங்ஸ்டன் நடிகர் விஜயகாந்திடம் கதை சொல்வதற்காக போயிருக்கிறார். அப்போது லிவிங்ஸ்டன் கதை சொன்ன அழகைப் பார்த்து அவரை பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்கச் சொல்லி இருக்கிறார். விஜயகாந்தின் பேச்சை தட்ட முடியாமல் லிவிங்ஸ்டனும் சரி என்று சம்மதம் சொல்லி இருக்கிறார்.
இப்படியாக இயக்குனராக வேண்டும் என்று கனவில் வந்த லிவிங்ஸ்டன் நடிகராக மாறினார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிறகு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும், அடுத்தடுத்து வெற்றி பெற முடியாமல் தவித்த லிவிங்ஸ்டன் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
வெள்ளி திரையைத் தொடர்ந்து சின்ன திரையிலும் களமிறங்கினார் லிவிங்ஸ்டன். சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கேரக்டரில் லிவிங்ஸ்டன் நடித்தார். அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
லிவிங்ஸ்டனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகியாக ஜோவிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லிவிங்ஸ்டன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் மதம் மாறியது தொடர்பாக பேசி இருக்கிறார். அந்தப் பேட்டியில், “நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்டியானாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்து விட்டேன். அதனுடைய பொட்டு தான் நெற்றியில் வைத்திருக்கிறேன்,” என்று கூறினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரம் நெட்டிசன்களில் சிலர் லிவிங்ஸ்டனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எப்படி ஒரு மதம் போர் அடித்து விடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.