பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Read In English: Naga Chaitanya-Sobhita Dhulipala engaged, Nagarjuna shares first photos: Here’s how their ‘infinite love’ began
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜூனாவின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் கடைசியாக கஷ்டடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரின் ஒருசில தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றிருந்தது.
அதேபோல் தன்னுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்த நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இருவருமே தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் மற்றும் வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வந்தது.
இது குறித்து இருவருமே எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இன்று நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இந்த நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நாகர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவரை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!
அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!" தற்செயலான ஒரு அழகான தருணத்தில், 08-08-2024 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது, ‘8.8.8’ என்று குறிப்பிட்டு, எல்லையற்ற அன்பின் ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் நாகா மற்றும் சோபிதாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் இன்று முறைப்படுத்தப்பட்ட அவர்களின் உறவுக்கு வலு சேர்த்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான தூத்தா என்ற வெப் தொடரில் நடித்திருந்த, நாக சைதன்யா தற்போது சாந்தூ மொண்டேட்டியின் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி இணைந்து நடிக்கிறார். அதேபோல், தேவ் படேல் இயக்குனராக அறிமுகமான மங்கி மேன் படத்தில் சோபிதா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“