/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-103132-2025-09-02-10-31-46.jpg)
சினிமா கனவோடு சென்னைக்கு வந்த ரகுவரனுக்கு எடுத்ததும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிப்பை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்த அவர் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்ட ரகுவரன் தொடர்ந்து வாய்ப்புகள் தேட 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாற முடிவு செய்தார். வில்லன் என்றால் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்ற விதி அப்போது கோலிவுட்டில் இருந்தது. அதை அடித்து சுக்கு நூறாக்கியவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கு உடல் தேவையில்லை தனித்துவமான உடல்மொழியும், தேர்ந்த நடிப்பும் போதும் என நிரூபித்தவர் அவர். அப்படி அவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் இன்றுவரை ஆல்டைம் ஃபேவரைட்.
ரகுவரன் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதற்கு உதாரணமாக பல படங்கள் இருந்தாலும் அதில் முத்தாய்ப்பாக இருப்பது பாட்ஷா. ரஜினி நடித்த அந்தப் படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ரகுவரன். ஆண்டனி மார்க் ஆண்டனி என அவர் கூறும்போதே ஒரு திகில் உணர்வு ஏற்படும் அளவுக்கு தனது குரலை பயன்படுத்தியிருப்பார்.
ரஜினியேக்கூட விழா ஒன்றில் ரகுவரனை பெருமையாக பேசியிருப்பார். அதுமட்டுமின்றி இதுவரை எனக்கு வில்லனாக நடித்தவர்களில் இரண்டு பேர்தான் சிறப்பு. அதில் ஒருவர் ரகுவரன் என கூறியிருந்தார்.
ரகுவரன் வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் கலக்கியவர். முகவரி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக நியாயம் செய்திருப்பார் அவர். அதேபோல் அவர் கடைசியாக நடித்த யாரடி நீ மோகினி படத்திலும் அப்பா வேடத்தில் அதகளம் செய்திருப்பார். தனுஷிடம் அவர் பேசும் மாடுலேஷன், தனுஷிடம் கோபப்படுவது என நடிப்பில் அசுர பாய்ச்சலை செலுத்தியிருப்பார்.
திரையுலகில் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் வில்லனாக பங்களித்த ரகுவரன், தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். அவருடைய மறக்க முடியாத கதாபாத்திரங்கள், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தவை தான். 'மிஸ்டர். பாரத்' , 'ஊர்காவலன்', 'மனிதன்', 'சிவா', 'ராஜா சின்ன ரோஜா' , 'பாட்ஷா', 'முத்து', 'அருணாச்சலம்' மற்றும் 'சிவாஜி' போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர்.
அவர் ஒரு பழைய நேர்காணலில் பேசுகையில், "சத்யராஜ், நிலங்கள் ரவி - இருவருமே என் நண்பர்கள் தான்." என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் தொகுப்பாளினி அணு ஹாசன் எந்த கதாபாத்திரத்தில் உங்களுக்கு நடிக்க பிடிக்கும் என்று கேட்ட போது, "ஹீரோவை தவிற எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிப்பேன்." என்று ஒரு புன்னகையுடன் கூறியிருப்பார்.
கடைசியாக எத்தனையோ படங்கள் இருந்தாலும் தன்னை பிரபலமாக்கிய கதாபாத்திரமாக 'பாட்ஷா' திரைப்படத்தில், தான் ஏற்று நடித்த மார்க் ஆண்டனி பாத்திரத்தை ரகுவரன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நடிகை அனு ஹாசனுடனான ஒரு பழைய நேர்காணலில், மார்க் ஆண்டனி கதாபாத்திரம் தன்னை பிரபலப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.