நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 1974ஆம் ஆண்டு வெளியான 'அவள் ஒரு தொடர் கதை' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். தமிழில் 150 படங்களில் நடித்துள்ள அவர், 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும், எழுத்தாளராகவும் பயணித்து உள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். ராஜேஷின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மறைந்த பிரபல இயக்குநரான மகேந்திரனின் உறவினர் ராஜேஷ். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் மகேந்திரனின் மகனும், இயக்குநருமான ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தகவல் அறிந்து நடிகை ராதிகா சரத்குமார்,”ராஜேஷ் அவர்களின் எதிர்பாராத மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவருடன் எண்ணற்ற திரைப்படங்களை இணைந்து பணியாற்றியிருக்கிறோம். திரைப்படம் மற்றும் வாழ்க்கை குறித்த அவரது பரந்த அறிவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினரால் அவர் பெரிதும் நினைவுகூரப்படுவார்”.