/indian-express-tamil/media/media_files/2024/11/16/rajinikanth-birthda.jpg)
திரையில் உச்ச நட்சத்திரமாக ஒருவர் திகழ்ந்தாலும், நிஜ வாழ்விலும் அவ்வாறு ஒரு தோற்றத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றால் அது ரஜினிகாந்த் தான்.
இந்தியாவிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் முதன்மையானவர் என்று நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், ரஜினிகாந்தை யாசகம் பெறுபவர் என்று ஒரு பெண் நினைத்து விட்டார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், பெங்களூருவில் இருக்கும் கோயிலில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. இதனை, பழைய நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.
அந்த வகையில், "ஒரு முறை மாறுவேடத்தில் பெங்களூருவில் அமைந்திருக்கும் கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு பெண் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் யாசகம் பெறும் நபர் என்று அப்பெண் நினைத்து விட்டார்.
உடனடியாக, அப்பெண் பத்து ரூபாயை என்னிடம் தர்மமாக கொடுத்தார். பதிலுக்கு எதுவும் கூறாமல், நானும் அதனை பெற்றுக் கொண்டேன். சிறிது நேரம் கழித்து என்னிடம் இருந்த ரூ. 200-ஐ கோயில் உண்டியலில் நான் போட்டேன்.
இதனை பார்த்ததும் அப்பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. சில நிமிடங்களுக்கு அப்படியே அமர்ந்து யோசிக்க தொடங்கினார். கோயிலில் இருந்து நான் கிளம்பும் போது, என்னை பின் தொடர்ந்து அந்தப் பெண்ணும் வந்தார். நான் காரில் ஏறிய பின்னர், எனது தலையை சுற்றி கட்டியிருந்த துணியை அகற்றி விட்டேன்.
அப்போது தான், நான் யாரென்று அப்பெண்ணுக்கு தெரிந்தது. அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், நானும் காரில் சென்று விட்டேன்" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.