ராமராஜன், 80-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக மிக உயரத்தில் இருந்த நடிகர். இன்னும் சொல்லப்போனால், அன்று ரஜினிக்கு அடுத்தபடியாக வசூலைக் கொடுத்து, சம்பளமும் அதிகமாக வாங்கியவர். இவரது கரகாட்டக்காரன், பட்டி தொட்டிகளில் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது. இளையராஜா காம்பினேஷனில் இவரது படப் பாடல்கள் இன்னமும் தேனாக இனிக்கக் கூடியவை!
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க வட்டாரங்களில் இன்றும் இவரின் சாதனைப் படங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகமாக சிலாகிக்கப்படும். அப்படிப்பட்ட ராமராஜன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் விபத்தில் சிக்கி மீண்டது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் விபத்தில் சிக்கும் வரை கதாநாயகனாகவே நடித்தார்.
ராமராஜன், எம்.ஜி.ஆர். ரசிகர்! எம் ஜி ஆரைப்போல் தன்னுடைய படங்களில் மது, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என இறுதிவரை உறுதியாக இருந்தவர்.
அரைக்கால் டிரவுசரையும் மறுக்காமல் போட்டுக்கொண்டு இவர் ஏற்ற சில பாத்திரங்கள் சிலரால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. அன்று இவரின் நடிப்பை விமர்சித்தவர்களும் இன்று அவரின் படங்களை ரசிக்கலாம். அந்த அளவுக்கு கிராமத்து மண் வாசனை படங்களில் முத்திரை பதித்தார்.
அரசியலில் ஜெயலலிதா இவரை ஓரளவு பயன்படுத்தினார். குறுகிய காலம் திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஆனாலும் சில சொந்தப் படங்கள் கையை கடிக்க, பொருளாதார ரீதியாக சிரமப்பட ஆரம்பித்தார். இந்தச் சூழலில்தான் விபத்தும் அவரை உருக்குலைத்துப் போட்டது.
தற்போது ஓரளவு உடல்நலம் தேறிவிட்டார். சமீபகாலமாக சில கதாநாயகர்களும் சினிமா நலம் விரும்பிகளும் இவரை குணசித்திர நடிகராக்க முயன்று வருகின்றனராம். ஆனால் இப்பொழுதும் ராமராஜன் தன் நிலையிலிருந்து கீழிறங்காமல் தவிர்த்து வருவதாக சொல்கிறார்கள்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள். ராமராஜனின் பிடிவாதத்தை அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா?
திராவிட ஜீவா