/indian-express-tamil/media/media_files/2025/06/12/FNVTpfgFhlKgnkVMk0Qi.jpg)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும். குறிப்பாக, யாருடைய திரைப்படம் அதிக வசூல் குவிக்கிறது என்று அவ்வப்போது சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
அந்த வரிசையில், அஜித் - விஜய்க்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர்ளுடைய திரைப்படங்கள் வெளியாகும் போது பண்டிகை தினத்தை போன்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். எனினும், இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக பல்வேறு சூழல்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் நண்பரான சஞ்சீவ், அஜித்தை சந்தித்து பேசிய தருணத்தை ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது, அஜித் பேசிய சுவாரஸ்ய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தல என்ற பெயருக்கு அஜித்குமார் பொருத்தமானவர். இயல்பாகவே மிகவும் தைரியமான மனிதர். மற்றவர்கள் விமர்சனங்களுக்கு துளியும் கவலை கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் ஆற்றல் அஜித்குமாருக்கு இருக்கிறது.
எந்த விதமான சினிமா பின்னணியும் இல்லாமல் இருந்து வந்து, இன்று உயரிய அந்தஸ்தை பிடித்துள்ளார். ஒரு முறை நானும், என்னுடைய நண்பர் ஸ்ரீநாத்தும் அஜித்தை பார்ப்பதற்காக சென்றோம்.
அவருடைய கேரவனில் தான் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஜூஸ் கொடுத்து எங்களை நன்றாக உபசரித்தார். நானும், ஸ்ரீநாத்தும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என்று அஜித்துக்கு நன்றாகவே தெரியும்.
அப்போது, 'என் வாழ்வின் ஒரே குறிக்கோள் உங்கள் நண்பரை ஜெயிக்க வேண்டும் என்பது தான். உங்க ஃப்ரெண்டை தூக்கி போட்டு நான் மேல போய்டுவேன்' என அஜித் கூறினார். அஜித்தின் அந்த வெளிப்படையான குணம் எங்களுக்கு பிடித்திருந்தது.
இதனை விஜய்யிடம் கூறிய போது, அவரும் சிரித்தார். இவ்வாறு சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும் என்று கூறினார். எந்த விதமான பயமும் இல்லாமல் இருக்கும் அஜித்தின் குணம் எல்லோருக்கும் கிடைக்காது. எவ்வளவு சறுக்கினாலும் மீண்டும் எழுந்து வருவேன் என்ற ஒரு தைரியம் அஜித்திற்கு இருக்கிறது" என்று சஞ்சீவ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.