நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சிம்புவைப் பற்றி கூறியுள்ள தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். அவர் இனிமேல் காமெடி நடிகராக நடிக்கப்போவதில்லை, நடித்தால் ஹீரோவாதான் நடிப்பேன் என்று முடிவெடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே மட்டும் நடித்து வருகிறார். சந்தானம் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஏ1, டிக்கிலோனா போன்ற படங்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக அவர் பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
சினிமாவில் நடிகர் சந்தானம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு இருக்கும் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்புதான்.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கி வந்த சந்தானத்தின் கவுண்ட்டர் டயலாக்கைப் பார்த்து வியந்த சிம்பு அவருக்கு தன்னுடைய காதல் அழிவதில்லை படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்பளித்தார். இதையடுத்து, சந்தானம் சிம்பு உடன் மன்மதன், வல்லவன், வானம் போன்ற படங்களில் சேர்ந்து சந்தானம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறிந்தது. சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சிம்புவைப் பற்றி கூறிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் நடிகர் சந்தானம் கூறியிருப்பதாவது: “ஆரம்பத்தில் இருந்தே சிம்புவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தற்போது அவர் ஆன்மீக புத்தகங்களை படித்தும், அது சம்பந்தமான யூடியூப் வீடியோக்களை பார்த்தும் முழுமையாக ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார். இவ்ளோ ஆழமாக ஆன்மீகத்தில் இறங்குவார்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல.
திருவண்ணாமலைக்கு அடிக்கடி போய் அங்குள்ள சித்தர்களை பார்த்து வருகிறார். முன்பெல்லாம் அவரை சந்தித்தால் மணிக்கணக்கில் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். ஆனால், இப்போதெல்லாம் சந்தித்தால் இருவரும் ஆன்மீகத்தை பற்றி தான் அதிகம் பேசுகிறோம். அவர் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எனக்கு சொல்வார். அவர் தற்போது ஒரு தனி டிராக்கில் டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கார்” என்று சந்தானம் கூறினார்.
நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்வார் என அவருடை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிம்பு ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார்னு சொன்னதைக் கேட்டு அவர் ஆன்மீகவாதியாகி விடுவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"