/tamil-ie/media/media_files/uploads/2022/09/Trichy-EVR-Sathyaraj.jpg)
க. சண்முகவடிவேல்
திருச்சி காஜாமலையில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நாளை 18-ம் தேதி நடைபெற உள்ளது.
கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை பெரியார் கலையரங்கில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுக்கு சங்கத்தின் புரவலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா தலைமை வகிக்கிறார். மேலும் திரைப்பட நடிகர் சத்யராஜ், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளனர்.
அதைத்தொடர்ந்து தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் முன்னாள் மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்ராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் தவறாமல் பங்கேற்று, தங்களுடன் படித்த பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழுமாறு எம்.பி திருச்சி சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.