நாவல்களைத் தழுவி திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட உள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து இயக்கிய அசுரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல், தமிழக அரசியலில் பொதுச் சமூகத்தின் பேசு பொருளாக மாறாமல் இருந்த பஞ்சமி நிலம் பற்றி பரபரப்பாக பேச வைத்தது.
அதே போல, நடிகர் சூரியா காப்பான் படத்தை தொடர்ந்து, அவர் நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீட்டிற்கா காத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். அதே நேரத்தில், சூரியா தனது 39வது படத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியா கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியா வாடிவாசல் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்ற நாவலின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
வாடிவாசல் நாவல் ஜல்லிக்கட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடப்படும் நுழைவுவாயில் ஆகும்.
இந்தப் படம் இந்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 2021 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக் அப் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய விசாரணை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் பெற்று வெற்றிமாறன் உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து, இயக்கிய அசுரன் படம் தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்தது. இப்போது மூன்றாவது முறையாக வெற்றிமாறன் ஒரு நாவலைத் தழுவி இயக்கும் படத்தில் சூரியா கதாநாயகன் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.