scorecardresearch

‘என் ஜோதிகாவுக்கும் பிள்ளைகளுக்கும்..’ தேசிய விருது பற்றி நெகிழ்ந்த சூர்யா

தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

‘என் ஜோதிகாவுக்கும் பிள்ளைகளுக்கும்..’ தேசிய விருது பற்றி நெகிழ்ந்த சூர்யா

தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிப்பதாகவும், இந்த விருதை மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உரித்தாக்குகிறேன் என்றும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்னா பால முரளி நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர். சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம், உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் நடிகர் சூர்யாவிற்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வாழத்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த அறிக்கையில் வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷா நாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கனுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னதுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor surya statement about national award for soorarai potru movie

Best of Express