/tamil-ie/media/media_files/uploads/2023/01/New-Project43.jpg)
திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி பிரபலமுமான தாடி பாலாஜியும், மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தாடி பாலாஜி பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பாலாஜி கலந்து கொண்டார். இவரும், ஈரோடு மகேஷும் விஜய் டிவியில் கேம் ஷோ நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியது மக்களிடையே வரவேற்பு பெற்றது. பாலாஜி காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாதவரம் பகுதியில் வசித்து வரும் அவரது மனைவி நித்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே காரை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே வாய் தகராறு நீடித்து வந்துள்ளது. இந்தநிலையில், நித்யா தன் காரை சேதப்படுத்தியதாக மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காரை நித்யா சேதப்படுத்துவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக கொடுத்துள்ளார். மணியின் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாதவரம் போலீசார் நித்யா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சட்டப்பிரிவு 427 (பிறர் சொத்துகளை சேதப்படுத்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால், அவரை காவல்நிலைய பிணையில் போலீசார் விடுவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.