போலியாக திருமணப் பதிவு சான்று தயாரித்து அவதூறு பரப்பி மிரட்டி வருவதாக நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
2016-ல் வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆதிரா சந்தோஷ் எனும் அதிதி மேனன் கதாநாயகியாக அறிமுகமானார். அதே படத்தில் கதாநாயகனாக நடித்த அபி சரவணனைக் காதலித்து வந்தார்.
நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் புகார்
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தமது இ - மெயிலை ஹேக் செய்து, ஆவணங்களைத் திருடி, தம்மை திருமணம் செய்து கொண்டதுபோல் போலியான திருமணப் பதிவு சான்று தயாரித்து மிரட்டுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிதி புகாரளித்துள்ளார்.
நடிகர் அபி சரவணன்
வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அதிதி மேனன் தம்முடன் கணவன் - மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், கடத்திச் செல்ல முயற்சிப்பதாகவும் ஏற்கெனவே அபி சரவணன் கூறி வருகிறார்.
அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அதிதி, இருவரும் காதலித்தது உண்மைதான் எனவும், ஆனால், ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வாழவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன் அபி சரவணனால் ஏமாற்றப்பட்ட நடிகை உள்பட பலரும் ஆதாரத்துடன் தம்மை எச்சரித்ததால் அவரை விட்டுப் பிரிந்ததாக விளக்கமளித்துள்ளார்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கூட அபி சரவணன், தம் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவருடைய பெற்றோர் வந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்ததால் தான் புகாரளிக்கவில்லை எனவும் அதிதி மேனன் குறிப்பிட்டார்.
தம்மை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் நடிகர் அபி சரவணன் அவதூறு பரப்புவதாகவும், மெயிலை ஹேக் செய்து ஆவணங்களைத் திருடியது, தான் நடிக்கும் படங்களின் இயக்குநர் உள்பட பலருக்கும் தொல்லை கொடுத்து நிம்மதியைக் கெடுப்பதாகவும் புகாரில் அதிதி மேனன் குறிப்பிட்டுள்ளார்.
களவாணி மாப்பிள்ளை, அமீர் இயக்கத்தில் சந்தன தேவன் ஆகிய படங்களில் தாம் கதாநாயகியாக நடிப்பதால் தமது வளர்ச்சியை சிதைக்கும் எண்ணத்துடன் தம் மீது பொய் புகார் அளிப்பதாகவும் அபி சரவணன் மீது அதிதி மேனன் குற்றம்சாட்டியுள்ளார்.