பிக் பாஸ் வீட்டில் ஐந்து பேரில் ஒருவராக இருந்த நடிகை பிந்து மாதவி வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையோடு நூறு நாளை நிறைவு செய்கிறது. 15 பேரோடு பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள், ஒவ்வொரு வாரமும் மக்கள் கொடுத்த வாக்கின் அடிப்படையில், குறைந்த ஓட்டுக்களைப் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டார்.
நடிகர் ஸ்ரீ உடல் நலம் சரியில்லாமலும், நடிகர் தரணி மீது வீட்டில் இருந்த பெண்கள் குற்றம் சுமத்தியதால், அவராகவே வெளியேறினார். நடிகை ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வர, ஆரவ் அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததால், தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரும் வெளியேற்றப்பாட்டார். ஆனாலும் இன்று வரையில் மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு அபரிதமான செல்வாக்கு இருக்கிறது.
ஐந்து வாரங்களுக்கு பிறகு, பல்லாக்கில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர், பிந்து மாதவி. அதன் பின்னர் நடிகை சுஜா, ஹரிஷ் ஆகியோர் உள்ளே வந்தார்கள்.
நேற்று வரையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஐந்து பேர் இருந்தனர். கடந்த வாரமே, கமல்ஹாசன், அடுத்த சனிக்கிழமை என்னுடன் மேடையில் நான்கு பேர் இருப்பார்கள் என்று சொன்னார். அவர்களில் ஒருவர் வெற்றியாளர் என்றும் அறிவித்தார்.
வியாழக்கிழமை வீட்டில் இருக்கும் ஒருவர் வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லியிருந்தார். போட்டியாளர் ஐந்து பேருக்கும் பணத்தாசைக் காட்டினார். 15 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒருவர் வெளியேறலாம் என்று சொன்னார். ஆனால் யாரும் வெளியேற மறுத்துவிட்டனர்.
பணம் முக்கியமல்ல... போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியம் என்று போட்டியாளர்கள் ஐந்து பேரும் சொன்னார்கள். இதையடுத்து பிக் பாஸே ஒருவரை வெளியேற்றும் முடிவுக்கு வந்தார்.
பிக் பாஸ் தேர்ந்தெடுத்தது, நடிகை பிந்து மாதவியை. பிந்துவுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அவர் அதனை ஸ்போட்டிவாக எடுத்துக் கொண்டார். ஆனால் சினேகன் மட்டும் வழக்கம் போல அழுதார். மற்றவர்கள் அனைவரும் கலகலப்பாக பேசி அனுப்பி வைத்தனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது, ‘காலையில் விடியும் போது உங்களை நான் பார்க்க முடியாது. எப்படியிருந்தாலும் இன்னும் மூன்று நாளில் எல்லோரும் வெளியே வந்துவிடுவீர்கள். சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். உங்களுக்கு பார்ட்டி உண்டு’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.