பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்தவர் டெய்சி இராணி. 1950-களில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்றார். குறிப்பாக, பூட் பாலிஷ், ஜக்தே ராஹோ, நயா தார் போன்ற படங்கள் இவரை மிகப்பெரிய அளவில் புகழடைய வைத்தன.
இந்நிலையில், தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள டெய்சி இராணி, தான் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே பாலியல் வன்கொடுமைக்கு ஆளனேன் என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அப்போது எனக்கு வயது ஆறு. மதராஸில் 'ஹம் பன்ச்சி ஏக் தால் கே' எனும் பாலிவுட் படத்தில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, எனது அம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் எனக்கு கார்டியனாக இருந்தார். அப்படத்தின் ஷூட்டிங் போது நான் தங்கியிருந்த ஹோட்டலில், ஒரு நாள் இரவில், அவர் என்னிடம் அத்துமீறினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. அதற்கு பின், என்னை பெல்ட்டால் அடித்த அந்த நபர், யாரிடமாவது இதைச் சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.
அந்த நபரின் பெயர் நாசர். இப்போது அவர் இறந்துவிட்டார். பிரபல பாடகி 'சோஹ்ராபாய் அம்பாலேவாலி'யின் உறவினர் தான் அந்த நபர். சினிமாத் துறையில் பலரிடம் அவருக்கு தொடர்பு இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து ஏன் இப்போது இதைச் சொல்கிறேன் என்றால், குழந்தை நட்சத்திரமாக இருப்பது மிகவும் கடினமானது. அவர்கள் மீது பெற்றோர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும். சில குழந்தை நட்சத்திரங்களின் வாழ்க்கை தான் இனிமையாக இருக்கிறது. பலருக்கு அப்படி அமைவதில்லை. அதில் நானும் ஒருத்தி" என்று உருக்கமாக பேசினார்.